கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்டாரியோ, அதன் 2020 வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் -5 ஆம் திகதி சமர்ப்பிக்கும் என மாகாண நிதியமைச்சர் ரோட் பிலிப்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
போர்ட் அரசாங்கம் முதலில் மார்ச் மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கத் திட்டமிட்டது. ஆனால் அது கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே 5-ஆம் திகதி வரவு-செலவுத் திட்டங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக பிலிப்ஸ் கூறினார்.
கோவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் மாகாண மக்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய தேவையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
எங்களுக்கு ஒரு தடுப்பூசி வரும் வரை தொற்று நோய் மற்றும் அதன் எதிர்கால பரவல்களைக் கூட எதிர்பார்க்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். இந்ந நெருக்கடியில் இருந்து மீளும் வரை மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு தேவைப்படும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் எனவும் நிதியமைச்சர் ரோட் பிலிப்ஸ் தெரிவித்தார்.
தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு பற்றாக்குறை 38.5 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என்று பிலிப்ஸ் முன்னர் கூறினார். வாக்குறுதியளித்தபடி 2023 க்குள் மாகாணம் சீரான வரவு செலவுத் திட்டங்களுக்கு திரும்ப முடியாது என்றும் அவா் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.